மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் கிராமசேவை அதிகாரிகள் கருப்புப் பட்டியணிந்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம சேவை அதிகாரிகளை முகநூல் வாயிலாக அவதூறாக பேசியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம சேவை அதிகாரிகள் கருப்புப்பட்டி அணிந்து மாவட்டம் முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கையினை இன்று மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை அதிகாரிகள் கருப்புப்பட்டி அணிந்து பிரதேச செயலகம் முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், கருப்புப்பட்டியுடனேயே கடமைகளையும் மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் ஓந்தாச்சிமடம் பகுதி கிராம சேவை அதிகாரியை முகநூல் வாயிலாக ஒருவர் அவதூறாக பேசியதுடன், அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடையாற்றும் கிராம சேவை அதிகாரிகளையும் அவதூறாக பேசி கிராம அதிகாரிகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
கிராம உத்தியோகத்தர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதும், அவதூறாக பேசுபவர்கள், கொலை அச்சுறுத்தல் மேற்கொள்பவர்களை மிக வன்மையாக கண்டிக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.